புத்தகங்கள்
மழையில் நனையும்பொழுது
கொஞ்சமாகவேனும் பதட்டமடைகிறோம்
சில மணி நேரமேனும்
நம் வாழ்வின்
அத்தியாவசியத் தேவைகளை மறந்து
கடமைகளில் இருந்து தவறி
அமைதியிழந்து
அதன் ஈரத்தை உலரவைக்க முற்படுகிறோம்
வெயிலில்
மின் விசிறிக்கு அடியில்
அறையின் வெம்மையில்
இன்னும் ஏதேதோ வழியில்
முயற்சித்துக் கொண்டிருக்கிறோம்
அவற்றை
மழையில் நனைந்த
நம் உடலைப்போல்
எளிதாய்த் துவட்டி விட முடிவதில்லை
ஈரங்கள் உலர்ந்த பின்னும்
உடம்பில் பட்டத் தீக்காயம் போல
என்றும் அந்த ரணத்தை
சுமந்தலைகின்றன
வாசிப்பவனுக்கு
அதன் பக்கங்களின்
மேடுபள்ளங்கள்
உறுத்திக்கொண்டே இருக்கிறது
அதைப் பார்க்கும்பொழுதெல்லாம்
ஒரு தீரா சோகம்
என்றோ நடந்த துரோகம்
யார் மீதோ ஒரு அர்த்தமற்ற கோபம்
நம் மனதில் வந்து செல்கிறது
அதன் இருப்பு
ஒரு சிறு துயரச் சம்பவத்தின்
அடையாளச் சின்னமாய் அமைகிறது
அதனை மறக்க
எவ்வளவோ முயல்கிறோம்
ஆனால் என்றுமே
நம் இயலாமைக்கு
ஒரு சிறந்த எடுத்துக்காட்டாய்
நம்மைப்பார்த்து
சிரித்துக் கொண்டே வாழ்கிறது
மழையில் நனைந்த புத்தகங்கள்.

good one machi:)
ReplyDeletenice bro....
ReplyDeleteSuper post sweet bro😄
ReplyDelete