Sunday, 26 January 2014

மழையில் நனைந்த புத்தகங்கள்

புத்தகங்கள்
மழையில் நனையும்பொழுது
கொஞ்சமாகவேனும் பதட்டமடைகிறோம்

சில மணி நேரமேனும்
நம் வாழ்வின்
அத்தியாவசியத் தேவைகளை மறந்து
கடமைகளில் இருந்து தவறி
அமைதியிழந்து
அதன் ஈரத்தை உலரவைக்க முற்படுகிறோம்

வெயிலில்
மின் விசிறிக்கு அடியில்
அறையின் வெம்மையில்
இன்னும் ஏதேதோ வழியில்
முயற்சித்துக் கொண்டிருக்கிறோம்

அவற்றை
மழையில் நனைந்த
நம் உடலைப்போல்
எளிதாய்த் துவட்டி விட முடிவதில்லை

ஈரங்கள் உலர்ந்த பின்னும்
உடம்பில் பட்டத் தீக்காயம் போல
என்றும் அந்த ரணத்தை
சுமந்தலைகின்றன

வாசிப்பவனுக்கு
அதன் பக்கங்களின்
மேடுபள்ளங்கள்
உறுத்திக்கொண்டே இருக்கிறது

அதைப் பார்க்கும்பொழுதெல்லாம்
ஒரு தீரா சோகம்
என்றோ நடந்த துரோகம்
யார் மீதோ ஒரு அர்த்தமற்ற கோபம்
நம் மனதில் வந்து செல்கிறது

அதன் இருப்பு
ஒரு சிறு துயரச் சம்பவத்தின்
அடையாளச் சின்னமாய் அமைகிறது

அதனை மறக்க
எவ்வளவோ முயல்கிறோம்
ஆனால் என்றுமே
நம் இயலாமைக்கு
ஒரு சிறந்த எடுத்துக்காட்டாய்
நம்மைப்பார்த்து
சிரித்துக் கொண்டே வாழ்கிறது
மழையில் நனைந்த புத்தகங்கள்.

3 comments: